Monday, October 27, 2014

நட்ட நடு இரவில்
நெற்றிப் பொட்டில்
பட்டுத் தெறித்தது
ஒற்றைத் துளி !
“அம்மா மழை “ என்றேன்.

அம்மா
அப்பாவை எழுப்ப
அடுக்களைப் பாத்திரமெல்லாம்  
இடம் பெயர்ந்தன .
காலருகே , தலையருகே
வலமும், இடமுமாய்
தலை விரித்த குடைகளென
மழை ஏந்தின

“ அடுத்த மழைக்குள்
ஓடு மாற்ற வேண்டும் “
இது அப்பா.
“ஐந்து மழைக்காலமாய்
மாறாத பேச்சும்
மாற்றாத ஓடுகளும்  “
என்பாள் அம்மா .

கன்னத்தில் நீர் தெறிக்க
நேற்றிரவு 
கணவரை எழுப்பினேன்.
“நாளை ஏசி பழுது பார்க்க
ஆளை அழைக்கிறேன் “ என்றார்.


மாறித்தான்  போனது வாழ்க்கை !

No comments:

Post a Comment