Thursday, March 14, 2013

நிழலாடும் நினைவுகள் ...

Subha Sivanandham

நிழலாடும்   நினைவுகள்  ...


மகள் திருமணம் முடிந்து சென்ற பிறகு , வீட்டில் ஒரு வெற்றிடமும் , தனிமையும் உருவாக்கி  விட்டது.  இருவருக்கென  சமைப்பது ஒரு துயரச் செயலாக  மாறி விட்டது.  

மகன் , வாரக் கடைசியில் வந்து , "என்ன சமையல் இது "என்று  மல்லுக்கு நிற்கும் போது  தான் , வாழ்க்கை ருசிக்கிறது. 

       திடீர்  என ஒரு வெறுமைச் சூழ , இது வரை கடந்த வாழ்க்கைப் பயணம் 
கண்  முன் நிழலாடு கிறது.  குறிப்பாக  , இவர்கள் குழந்தைகளாய்  இருந்த  போது  நடந்த சம்பவங்கள் சில , 

          நாம் இவர்களுக்கு  பல விவரங்களை  கற்பித்து இருந்தாலும் , இவர்களே ஆசிரியராய் மாறி நமக்கு  வாழ்க்கையை கற்று தந்த நிகழ்வுகளை இங்கு  பதிவிடலாம் என நினைக்கறேன்.

        என் மகளுக்கு எட்டு வயதிருக்கும். கணவர்  பதவிவுயர்வு  பெற்று மும்பை சென்று விட்டார். நானும் மகளும் , கொஞ்சம் தொலை வில் இருக்கும்  சர்ச்சுக்கு   2 வீலரில் செல்வோம். பக்கத்தில் உள்ள  உயர் நிலைப் பள்ளி விடுதி  மாணவரும் அங்கே ஞாயிறு  காலை  வருவார்கள். 

ஒரு நாள்  என்னிடம் அவள் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனேன். 

" ஏன்  இந்த  அண்ணாக்கள் , நிறைய பேர் செருப்பு இல்லாமல் வருகிறார்கள் ? "

"  அவர்கள் வீட்டில் வாங்கி தர வசதி இல்லாமல் இருக்கலாம்" இது நான்.
ஏனெனி ல் அது  வசதியற்ற மாணர்வருக்கு இலவச கல்வி தரும் விடுதி.

உடனே அவள் , :" நாம் ஏ ன்  வாங்கி தரக் கூடாது ?? எவ்வளவு  ஆகும் " என்றாள். 

"  நிறைய செலவாகும் . நம்மால் முடியாது' என்றேன்  

அவள் விட்டு விடவில்லை 

 " அட்லீஸ்ட் ஒருத்தருக்கு கூடவா நம்மால் வாங்கித் தர முடியாது.? " அவள் விடுவதாய்  இல்லை.

" பார்க்கலாம்"

" இல்லை மம்மி , எனக்கு இந்த கிறிஸ்மஸ் க்கு புது பிராக் வேண்டாம். அதற்கு ஒருத்தருக்கு செருப்பு வாங்கி தரலாம் இல்லே" 

 கொஞ்சம் அசந்துப் போனேன் .

ஆனால் அவள் சொன்னதை நிறைவேற்றினேன். . ஒருசோடி  செருப்புக்கான 
தொகையை  விடுதி காப்ப்பளரிடம்  தந்து விவரம் சொன்னேன். 

கிறிஸ்மஸ் க்கு புது பிராக் வேண்டாம் என்ற பெண்  அதை அப்படியே கடை பிடித்தாள் . தினமும் அதை எனக்கு நினைவுருத்துவாள்." இந்த வருடம் எனக்கு புது பிராக்  வேண்டாம் . அது தான் , அந்த காசுக்கு செருப்பு வாங்கி தந்தோம் " என்பாள்.

ஆனால் ,  பண்டிகைக்கு  அவர் மும்பைலிருந்து , புது சட்டையுடன் வந்த     போது அதை மறுத்து விட்டாள் .  மிகவும் கட்டாயப் படுத்தி  அவளை உடுத்த வைத்தேன். 

இது போல் நிறைய சம்பவங்கள் .  சொல்லிக் கொண்டே போகலாம் .

நல்ல மதிப்பெண் பெற்று , பொறியியல் படிக்க , அண்ணா யூனிவேர்சிட்டி கிடைத்தும் , மருத்துவம் படிக்க ஒற்றைக் காலில் நின்றாள் . பொறியியல் வாய்ப்புகளை பற்றி சொல்லி கட்டாயப் படுத்திய போது இந்தியாவின் , ஏழைகளுக்கான மருத்துவம்   பற்றிய புள்ளி விவரங்களைச்  சொல்லி சம்மதிக்க  வைத்தாள் . படித்தும் முடித்தாள் .

நல்ல உயர்ந்த எண்ணங்களை வளர்த்து கொண்ட அவள் எந்த காரணத்தாலும் தன்  குணத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதே என் விருப்பம். 


நாம் தாம் பிள்ளைகளை நடத்துவதாய் நினைக்கிறோம். ஆனால் , குழந்தைகள் 
நமக்கு கற்று தருபவை ஏராளம் .

              மகனை பற்றியும் பகிர வேண்டும்  , இன்னொரு பதிவில் ....



No comments:

Post a Comment